ந.கனகராஜன்
முயல் சின்னுவுக்கு அன்றைக்கு நல்ல வேட்டை. நிறைய கேரட்டுகளை விழுங்கிவிட்டு வந்தது. 'அடேயப்பா... ஒரே நாள்ல எவ்வளவு குண்டாயிட்டேன். இந்த மாதிரி கேரட்டை என் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லே’ என்று சப்புக் கொட்டியது. 'ஆவ்வ்... கண்ணு சொக்குது. ஒரு குட்டித் தூக்கம் போட்டா சுகமா இருக்கும்’ என்றபடி படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டது.
ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. சின்னுவின் காதைப் பிடித்து யாரோ இழுத்தார்கள். கோபத் துடன் விழித்த சின்னு, எதிரே இருந்த உருவத்தைப் பார்த்துத் திகைத்தது. 'இதென்னது? பாறாங்கல்லு கை கால் முளைச்சு நிக்குதே’ என நினைத்தது. அது ஓர் ஆமை. சின்னு இதுவரை ஆமையைப் பார்த்ததேயில்லை. ''நீதானே சின்னு?'' என்று ஆமை கேட்டது.
''ஆமா, நீ யாரு?'' என்று கொட்டாவி விட்டபடி கேட்டது சின்னு.
''என் பேரு நடையழகன். ஒரு பழைய கணக்கு பாக்கி இருக்கு. அதை முடிக்கணும். நீ இந்தக் காட்டுக்குள்ள ஆமைகளைப் பத்தி கேவலமா பேசி, செய்தி பரப்பிட்டு இருக்கியாமே''
''இதென்னடா புதுக் கதையா இருக்கு. உன்கிட்ட யாரோ பொய் சொல்லியிருக்கறாங்க.''
''நரி செங்கண்ணன் பொய் சொல்லமாட்டான். நீ ஆமைகளை மட்டமா நினைச்சுட்டு இருக்கே. வா... நாம அந்த ஓட்டப் பந்தயத்தை நடத்துவோம். அதோ... அந்தப் பாறை மேடுதான் நம்ம எல்லை. அங்க இருக்கற இலந்தை மரத்தை யார் முதல்ல தொடறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க'' என்றது நடையழகன்.
''ஏய் நடையழகா... உனக்கென்ன பைத்தியமா? யாரோ சொன்னதை நம்பிட்டு கிறுக்குத்தனமா பேசாதே'' என்றது சின்னு. ஆமை விடுவதாக இல்லை. வேறு வழியின்றிச் சம்மதித்தது.
நடையழகன் முகத்தில் பிரகாசம். சின்னுவோ 'சீக்கிரம் ஓடிட்டு வந்து ஒரு தூக்கம் போடணும்’ என்று நினைத்தது.
''ஒண்ணு... ரெண்டு... மூணு...'' என்றதும் இரண்டும் ஓட ஆரம்பித்தன.

அதே நேரம், இலந்தை மரத்தடியில் நரி செங்கண்ணன் காத்திருந்தது. 'பல நாள் கனவு நனவாகப் போகுது. அந்த சின்னு எவ்வளவு கொழு கொழுன்னு இருக்கான். இந்த இலந்தை மரத்தைச் சுத்தி குழிகளை வெட்டி, மூடி இருக்கேன். அவன் முதல் ஆளா மரத்தைத் தொட வருவான். குழிக்குள்ள விழுவான். பாஞ்சு ஒரே அமுக்கு. செங்கண்ணா உன்னோட மூளையே மூளைடா!’ என்று சொல்லிக்கொண்டது.
காலையில் ஆற்றங்கரைப் பக்கம் செங்கண்ணன் மீன் வேட்டைக்காக வந்தபோது, நடையழகனைப் பார்த்தது. அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது. 'இந்த ஆமையை வைத்து சின்னுவுக்கு வலை விரித்தால் என்ன?’ என்ற யோசனை வந்ததுமே, ''நண்பா... என் பேரு செங்கண்ணன். ஆமைகளின் நண்பன்'' என்றது.
நடையழகன் ஒரு கணம் திகைத்துப்போய் 'நம்பலாமா... வேண்டாமா’ என்று யோசித்தது. 'இவன் சாதுவா தெரியறான். நல்லவனாத்தான் இருப்பான்’ என்று பேச ஆரம்பித்தது.
''நண்பா... உங்களை எல்லாம் ஒருத்தன் காட்டுக் குள்ள கேவலப்படுத்திட்டு இருக்கான். அதை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு'' என்றது செங்கண்ணன்.
''எங்களையா... யாரு?'' என்று கேட்டது.
''சின்னுன்னு ஒரு முயல். ஒரு காலத்துல ஓட்டப் பந்தயத்துல உங்க தாத்தா ஜெயிச்சாரே, அது ஏமாத்து வேலைன்னு சொல்றான். ஆமைகள் எப்பவும் பொய் சொல்லும், ஏமாத்தும்னு நிறைய சொல்லிட்டு இருக்கான்'' என்றது.
நடையழகனுக்கு கோபம் வந்தது. ''அவன் எங்கே இருக்கான்? என்னோடு மல்யுத்தத்துக்கு வரச் சொல்லு. பார்ப்போம்'' என்றது ஆமை.
''நடையழகா... பொறு. மல்யுத்தம் வேண்டாம். மறுபடியும் ஓட்டப் பந்தயத்துக்கு கூப்பிடு. பந்தயம் ஆரம்பிச்சதும் சின்னு ஓடுவான். நான் ஒரு இடத்தில பதுங்கியிருப்பேன். உன்னைத் தூக்கிட்டு குறுக்கு வழியில சின்னுவுக்கு முன்னால கொண்டு வந்து விட்டுருவேன்.''
''உம்... நீ முயலைவிட வேகமா ஓடுவியா?''
''சும்மா மின்னல் மாதிரி பறப்பேன்.''
''அப்ப சரி'' என்று சம்மதித்தது ஆமை. இதுதான் காலையில் நடந்த கதை.
பந்தயம் ஆரம்பித்ததும் பாதி தூரம் வந்த சின்னு, திரும்பிப் பார்த்தது. நடையழகனைக் காணவில்லை. 'இவன் வந்து சேர்றதுக்கு ஒரு நாளே ஆகும்போல இருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்’ என்று நின்றுவிட்டது.
நடையழகன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. 'என்ன இந்த செங்கண்ணனைக் காணோம்? இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணுமோ... இப்பவே கண்ணைக் கட்டுதே’ என நினைத்தது.
அப்போது நடையழகனுக்கு நேர் மேலே கழுகு கூரான் வந்தது. அதன் பார்வை நடையழகன் மேல் விழுந்தது. சர்ரென்று பாய்ந்து வந்து 'லபக்’கென்று தூக்கிக்கொண்டு வானத்திற்கு விரைந்தது. நடையழகனுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை.
''என்னது... செங்கண்ணன் தூக்கிட்டுப் போறானா? ஆனா, அவனால பறக்க முடியாதே?''
''உய்ய்ய்... ஊய்ய்... இவனை பாறை மேலே போட்டு உடைச்சுத் தின்ன வேண்டியதுதான்'' என்று கூரான் உற்சாகமாய் விசிலடிக்க... நடையழகனுக்கு குப்பென்றது.
''அய்யோ... தொலைஞ்சேன்!''
கூரான் பாறை மேட்டுக்கு மேலே பறந்தது. அங்கிருந்து வீயெறிந்தது. நடையழகன் ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டு, 'நடப்பது நடக் கட்டும்’ என கண்களை மூடிக் கொண்டது.
பாறைக்குப் பக்கத்தில் பதுங்கி இருந்த செங்கண்ணன் தலைமேல் விழுந்தது நடையழகன். செங்கண்ணன் தலைக்குள் இடி இடித்தது. மயங்கிப் போனது. நடையழகனால் நம்ப முடிய வில்லை. ''நான் எப்படி உயிரோட இருக்கறேன்?. பாறை மேலே விழ இருந்த என்னை யாரோ காப்பாத்திட்டாங்க. இதுக்கு மேலே இங்க இருந்தா ஆபத்து. அப்படியே நழுவி ஆத்துப் பக்கம் ஓடிடணும்'' என்று ஓட்டம் எடுத்தது.
அதேசமயம் நீண்ட நேரம் ஆமையை எதிர்பார்த்த சின்னு, அலுத்துப் போய் தன் வீட்டுக்குத் திரும்பியது.
Source - Vikatan Magazine